Thursday, November 16, 2006

வாஸந்தி ஆடும் கண்டி நடனம்

பலமுறை பலரும் வலைப்பதிவுகளில் விவாதித்த விடயம் தான் இது.என்றாலும் வாஸந்தி காலந்தோறும் தன் விஷக் கொடுக்குகளின் கூர்முனையை புதுப்பித்தபடியும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொதெல்லாம் எங்காவது பாய்ச்சியபடியும் அலையும் கருந்தேளாகவே இன்னமும் இருப்பதால் இதை எழுத வேண்டியதாகிறது.

ஈழப்போராட்டத்தின் மீதான வாஸந்தியின் தாளாத கோபம் என்பது திடீரென்று வந்து குதித்ததல்ல.தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களின் நீட்சியாகவே வாஸந்தி ஈழப்போராட்டத்தையும் காண்கிறார்.திராவிட இயக்கத்தின் மீதான தனது கோபங்களின் தொடர்ச்சியை,தமிழ்த் தலைவர்களின் மீது விமர்சனம் என்ற பெயரில் தான் கக்கும் விஷங்களை ஈழப்போராட்டத்தின் மீதும் காட்டுவது தற்செயலான ஒன்று அல்ல.வாஸந்தியின் அடி மனதில் புரையோடிப் போயிருக்கும் திராவிட எதிர்ப்பின் வெளிப்பாடு இதுவெனக் கொள்ளலாம்.

இதை வாஸந்தியின் ஆதிக்கசாதித் திமிர் அதனால் இயல்பாகவே எழுந்த திராவிட எதிர்ப்பு என்ற விதத்தில் பலரும் அணுகுகிறார்கள்.அது உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் இங்கு பார்ப்பனர்,எதிர்-பார்ப்பனர் என்ற சுழலுக்குள் இந்தக் கட்டுரையைக் கொண்டு போக விரும்பாமையினால் வாஸந்தியின் துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் என்ற கட்டுரையின் எதிர்வினையாக அணுகலாம் என நினைக்கிறேன்.

கடந்த மாத தீராநதி இதழில் கேதீஸ் லோகநாதனின் மறைவையொட்டி வாஸந்தி எழுதிய கட்டுரைக்கு இந்த மாத தீராநதியில் கவிஞர் தாமரை,பேராசிரியர் சிவசேகரம் உட்படப் பலர் பதிலளித்திருக்கிறார்கள்.

கேதீஸ் போன்ற ஆளுமைகள் மீது எனக்கு பல்வேறு விமர்சனங்களிருப்பினும் மதிப்பும் நிறைய இருக்கிறது.அந்த மதிப்பு என்பது அவர்களின் கல்வி கேள்விகளின் பாற்பட்டது அல்ல.கொழும்பில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர்கல்வி வரை வெளிநாட்டிலேயே கற்ற ஒருவர் இலங்கையின் யுத்த்தச் சூழலையொட்டி இலகுவாக மேற்கொள்ளக் கூடிய தீர்மானம் வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கேயே காலத்தை ஓட்டுவதாகும் ஆனால் கேதீஸ் தனக்கென்றொரு கோட்பாட்டை வகுத்துக்கொண்டு அதன் பாதையில் போயிருக்கிறார்.

இது ஒரு புலிவீரனின் தியாகம் எனப்படுவதற்கு எந்த விதத்திலும் குறைவுடையதல்ல.அவர் தனக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்பதுதான் அவரது அர்ப்பணிப்பைப் புறந்தள்ளி அவரை துரோகியாகவும் காட்டிக்கொடுப்பாளனாகவும் கருத வைத்திருக்கிறது.அரசாங்கப் பணிகளில் ஈடுபடுவதென்பதே தவறென்றால் இன்றைக்கு ஆசிரியர் முதல் அத்தனை அரசாங்க உத்தியோகத்தர்களையும் போட்டுத் தள்ளுவதென்பதுதான் தீர்வாக இருக்கும்

பலரும் நினைப்பதுபோல கொழும்பு மேல்தட்டுத் தமிழர்கள் பலர் பணத்துக்காக ஆசைப்பட்டு இந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்வதாக நான் நினைக்கவில்லை கேதீஸ் நினைத்திருந்தால் சர்ச்சைக்குரிய வேலைகளை விட்டுவிட்டு புலிகளின் கண்ணிலேயே படாத ஒரு வேலைக்கு போயிருக்கலாம் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்த அவரை ஆரம்பம் முதலே அரசியல் நிர்வாகப் பாடங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது வெறுமனே பணமாக இருக்காது அதையும் மீறி மக்கள் தனது இனத்தின் இருப்பு சட்டபூர்வமாக தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை எப்படியாவது வென்றெடுத்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ்
.ஆரம்பம் முதலே தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே இனங்காட்டி வந்த கேதீஸ் அரசாங்க சமாதானச் செயலகப் பணியில் இருக்கும்போதே ஈழவாதியென்று ஜேவிபியின் தாக்குதல்களை எதிர்கொண்டவர்.ஜேவிபியின் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவே அவரைக் கொட்டி(புலி) என்று அழைத்திருக்கிறார்கள்

இதேவேளை புலிகளின் செயற்பாடுகள் பற்றி கேதீஸ் வைக்கும் காட்டமான விமர்சனங்கள் சிங்களப் பத்திரிகைகளால் அவர்கள் நலன்கருதிப் பெரிதுபடுத்தப்பட்டன.இதனால் புலிகளின் வெளிப்படையான எதிர்ப்பையும் கேதீஸ் சம்பாதித்திருக்கிறார்.

இன்று இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிப்பதாக மகிந்த சிந்தனை இருக்கிறது ஒப்புக்குச் சப்பாணி போல சமாதானச் செயலகங்களை ஏற்படுத்தி கேதீஸ் போன்றவர்களை வெளிப்பார்வைக்கு வேலைக்கமர்த்தினாலும் மகிந்தவும் அவருடைய ராஜபக்ச சகோதரர்களும் இணைந்து ஏற்படுத்திய மகிந்த சிந்தனையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.அந்த சிந்தனைதான் லக்ஷ்மன் கதிர்காமர் முதல் கேதீஸ்,ரவிராஜ் வரை யாரை எப்போது போட்டுத்தள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறது.

மகிந்த சிந்தனையின் தீர்மானத்தின்படிதான் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிலையத்திற்கு பணிமாற்றலாகப் போகவேண்டிய கேதீஸை மகிந்தவால் ஏற்படுத்தப்பட்ட சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியமர்த்தியது.ஜே ஆர் காலத்திலிருந்து கைக்கொள்ளப்பட்டு வரும் தந்திரமான உத்தி இப்படியான பதவியொன்றில் தமிழர் ஒருவரை இருத்தி அவருக்கு அரச பத்திரிகைகள் மூலம் முக்கியத்துவம் கொடுத்து வெளியுலகின் பார்வைக்கு தமிழர் ஒருவரே தமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார் எனக் காட்டுவது.மகிந்த அரசில் அந்தப் பலிகடா கேதீஸ்.

மகிந்தவின் செயற்பாடுகளாலும் அரச படைகளால் கணக்கு வழக்கின்றிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளாலும் கேதீஸ் அதிருப்தியுற்றிருக்கிறார்.தான் பணிபுரியும் சமாதானச் செயலகமே ஒரு கண்துடைப்பு என்று புரிந்துகொண்டிருக்கிறார்.அதிலிருந்து விலகப்போவதாக தெரிவித்தபோது மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச கேதீசை மிரட்டியிருக்கிறார்.உச்சக்கட்டமாக மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டதையிட்டு அதிர்ச்சி அடைந்த கேதீஸ் அது சமப்ந்தமாக தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் விசாரித்து தகவல்கள் சேகரித்திருக்கிறார்.இவை கேதீசின் மனைவி பவானி வாயிலாக வெளிவந்த தகவல்கள்.

சமீப காலமாக கேதீஸ் புலிகளுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைத்ததில்லை.பேட்டிகளோ கருத்துகளோ வெளியிட்டதில்லை.அது மட்டுமன்றி அவர் இருக்கும் பதவி கூட பொம்மைப் பதவிதான் என்று சாதாரண அரசியல் புரிந்தவர்களுக்குக் கூட தெரிந்திருக்கும்.ஆக புலிகள் கேதீசைக் கொலை செய்திருப்பின் அதனை மூன்று வருடகாலங்களுக்கு முன் செய்திருக்க வேண்டும் இப்போது செய்வதற்கு காரணமே இல்லை

செஞ்சோலை படுகொலைகள் மூலம் சரிந்து போன பெயரை தூக்கி நிறுத்தவும் எதிரான ஒருவரை அகற்றவும் புலிகளுக்கு சர்வதேச சமூகத்தில் கெட்ட பெயர் உருவாக்கவும் என்று பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்கும் ம்கிந்த சிந்தனையின் விளைவு தனக்கு பாதுகாப்புக்காக வருபவர்களுடன் வந்த புதியவர்கள் சிலரால் கொல்லப்பட்டார்

இவ்வளவும் இருக்க கேதீசும் மனைவியும் தனக்கு 20 வருடங்களாக நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் வாஸந்திக்கு இது தெரியாமற் போனதேன்.பவானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால் இவ்வளவையும் சொல்லியிருப்பாரே.

இங்கேதான் வெளிப்படுகிறது வாஸந்தியின் விஷக்கொடுக்கு பண்டாரநாயக்கர்களும் ராஜபக்சேக்களும் அடிக்கும் தாளத்துக்கு கண்டியன் நடனம் ஆடுவதன் மூலம் இந்திய அரசியலில் உள்ள சிலருக்கு தன்னை விசுவாசமான நாயாக நிரூபிக்க முயல்கிறார் வாஸந்தி.அதற்கான சாக்குப்போக்கு கேதீசின் மரணம் அதனை வைத்து தனது அரசியல் நாடகத்தை மகிந்த அரங்கேற்றிக்கொண்டு போக புலிகள் மீதான தனது எதிர்ப்பைக் காட்ட சிறந்த சந்தர்ப்பமாக வாஸந்தி பயன்படுத்திக் கொள்கிறார்.

இலங்கையில் அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் தொடக்கம் இந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்யும் அத்துமீறல்கள்,தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கட்டவிழ்த்து விடும் வன்முறை,சிவராம்,நிர்மலராஜன்,ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ் என்று நீளும் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்,செஞ்சோலை குண்டுவீச்சு,பாலியல் வன்முறைகள் எதையுமே வாஸந்தியால் விமர்சனமின்றி
ஏற்றுக்கொள்ள முடியும் புலிகளைத் தவிர.

இன்று கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் சாவதைப் பற்றிக் கவலைப்படும் வாஸந்தி குஜராத் கலவரம் பற்றி ஏதாவது கண்டனம் தெரிவித்திருக்கிறாரா ஏன் இந்த இரட்டை வேடம்?இந்திய இராணுவத்தால் யாழ் வைத்தியசாலை வைத்தியர்கள்,பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களெல்லாம் புத்திஜீவிகளாக வாஸந்தி கண்ணுக்குத் தெரியவில்லையா?

வன்முறையை விரும்பாத ஜனநாயகப் பிம்பத்தை வாஸந்தி பொருத்திக்கொண்டதாக நினைக்கிறார் அது கண்டி நடனம் தான் என்று எல்லோருக்கும் தெரிகிறது.தீராநதியில் இத்தனை பேர் வாஸந்திமேல் பாய்ந்திருப்பதே சாட்சி